ஜோகூரில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் கட்சித் தொண்டர்களைத் தண்டிக்குமாறு அமைச்சர் உத்தரவு

ஜோகூரில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் கட்சித் தொண்டர்களைத் தண்டிக்குமாறு அமைச்சர் உத்தரவு

2 mins read
d4a1f3f9-d28d-4ff9-994f-56f05a8f47a3
தலைக்கவசம் பரிமாற்றத் திட்டத்தின்போது, ​​போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் (இடது) பொதுமக்களில் ஒருவருக்குப் புதிய தலைக்கவசத்தை வழங்கினார். - படம்: மலாய் மெயில்

புத்ராஜெயா: ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது, ​​தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் நபர்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறு சாலைப் போக்குவரத்துத் துறைக்கு (ஜேபிஜே) போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் உத்தரவிட்டுள்ளார்.

லோக்கின் டிஏபி கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட, பிரசாரப் பணியாளர் குழுவினர் தங்களது வாகனப் பேரணிகளின் போது சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதைக் காட்டும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“ஆரம்பத்திலிருந்தே எனது நிலைப்பாடு தெளிவாகவும் சீராகவும் இருந்து வருகிறது,” என்று லோக் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்லிம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, ​​பெரிகத்தான் நேஷனல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இதே பிரச்சினையை நான் எழுப்பியபோது, ​​பிரசாரத்திற்கு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும், ஒவ்வோர் ஓட்டுநரும் தலைக்கவசம் அணிந்து பொதுமக்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்,” என்றார் அவர்.

சமூக ஊடகப் பதிவு ஒன்றில், முன்னாள் அமைச்சர் உட்பட பாரிசான் நேஷனல் பிரசாரப் பணியாளர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்லும் புகைப்படத்தையும் திரு லோக் இணைத்திருந்தார்.

இந்தக் கொள்கைகள், தமது சொந்தக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் பிரசாரப் பணியாளர்கள் உட்பட, விதிவிலக்கின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் கூறினார்.

“சாலைப் பாதுகாப்புச் சட்டங்கள் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதில்லை,” என்று கூறிய அவர், இந்தச் சட்டம் அனைத்து மலேசியர்களுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எந்தவொரு கட்சியின் அரசியல் நலன்களைவிட பொதுப் பாதுகாப்பே முதன்மை பெறும் என்று திரு லோக் மீண்டும் வலியுறுத்தியதோடு, குற்றவாளிகளின் அரசியல் பின்னணிகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் சாலைப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
சாலைப் பாதுகாப்புதலைக்கவசம்இடைத்தேர்தல்