கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ரமணன் பாராட்டு

கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ரமணன் பாராட்டு

2 mins read
531c976f-833b-48c3-87cd-d97d2d16d857
வெற்றி பெற்ற மாணவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் மலேசிய மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன். - படம்: தமிழ் மலர்

கோலாலம்பூர்: பேங்காக் புத்தாக்க விருதுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் தொடக்கப்பள்ளி பொறியியல் பிரிவில் இரண்டாம் இடத்தையும் வென்று மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள லுனாஸ், கெடாவைச் சேர்ந்த நான்கு இந்திய மாணவர்களைச் சந்தித்தது ஒரு பெருமிதமான, நெகிழ்ச்சியான அனுபவம் என்று மலேசிய மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தமது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சாதனையை நிகழ்த்திய லுனாஸ், கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இளநேயன் யுவராஜன், தீர்ச்சனா முனியாண்டி, சுல்தான் பத்லிஷா இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இளஅருண் யுவராஜன், இளமாறன் முனியாண்டி ஆகியோரைக் கடந்த வாரம் புத்ராஜெயாவிலுள்ள மனிதவள அமைச்சுக்கு நேரில் அழைத்து அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். 

மலேசிய இந்திய மாணவர்கள் அனைத்துலக மேடைகளில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், ஆக்கபூர்வமான, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புத்தாக்கச் சிந்தனைகளால் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு இவர்களின் வெற்றி ஒரு தெளிவான சான்றாகும் என்று அவர் கூறினார். 

குறிப்பாக, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் இந்த இளம் இந்தியத் திறமையாளர்களின் ஆற்றல் நாட்டின் கண்ணியத்தையும் நற்பெயரையும் உலக அளவில் உயர்த்தியுள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார். 

பேங்காக்கில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்துகொண்ட தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க பெற்றோர் விடுமுறை எடுத்துக்கொண்டு நேரில் சென்றதை அமைச்சர் ரமணன் சுட்டிக்காட்டினார். 
பேங்காக்கில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்துகொண்ட தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க பெற்றோர் விடுமுறை எடுத்துக்கொண்டு நேரில் சென்றதை அமைச்சர் ரமணன் சுட்டிக்காட்டினார்.  - படம்: தமிழ் மலர்

இந்த வெற்றியின் பின்னணியில் மாணவர்களின் பெற்றோர் மேற்கொண்ட தியாகம் தமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரமணன், பேங்காக்கில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்துகொண்ட தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க அவர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு நேரில் சென்றதைச் சுட்டிக்காட்டினார். 

இத்தகைய குடும்ப ஆதரவும் ஊக்கமுமே இந்த இந்திய மாணவர்களின் வெற்றிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறது என்றும் ஒருவரது வெற்றி என்பது தனிப்பட்ட முயற்சியால் மட்டுமல்லாமல் கூட்டு ஆதரவின் மூலமே சாத்தியமாகிறது என்பதையும் இது நினைவூட்டுவதாக அவர் கூறினார். 

இளம் திறனாளர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய மனதார வாழ்த்தியதோடு, தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு உலக அரங்கில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க மற்ற மலேசிய இந்திய மாணவர்களுக்கும் இவர்களின் வெற்றி ஓர் உந்துதலாக அமையும் எனத் திரு ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்