புத்ராஜெயா: மலேசியப் போக்குவரத்து அமைச்சு, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு, நாட்டின் விமானத் துறையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இது குறித்து மலேசிய விமான நிலையங்கள் குழுமம், மலேசியப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றுடன் தொடர்ச்சியான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
மேலும், அடுத்த வாரம் விமானத் துறையுடன் ஒரு சிறப்பு ஆலோசனை அமர்வு நடத்தப்படும் என்றும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப துறைக்குத் தேவையான ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
“அண்மையில் மலேசியப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம், மலேசிய விமான நிலையங்கள் குழுமம் ஆகியவற்றின் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். விமானத் துறையின் நிலைத் தொடர்ச்சியை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விரைவில் துறையுடன் நேரடிக் கலந்துரையாடல் நடைபெறும்,” என்று அவர் கூறினார்.
மேலும், இந்த உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக, மலேசியாவில் பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
இந்த நடவடிக்கைகள், நாட்டின் போக்குவரத்துத் துறையின் சவால்களைச் சமாளிக்கவும் மக்களின் பயணத் தேவைகளைப் பாதுகாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

