சோல்: தென்கொரியாவின் ஜியோங்கி மாநிலத்தில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட பெண் ஒருவர், கொள்கலன் போன்ற குளிர்பதனப் பெட்டி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 60 வயதுகளில் உள்ள அந்தப் பெண், பாஜு நகரில் உள்ள உணவு, பானக் கடையில் இருந்த 30 சதுர மீட்டர் அளவிலான குளிர்பதனப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர்க் காவல்துறை திங்கட்கிழமை (செப்டம்பர் 7) தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் 30 வயதுகளில் உள்ள உணவு, பானக் கடையின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார். பெண்ணை அவர் கவர்ந்து கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இம்மாதம் 6ஆம் தேதி ஆடவரைக் கைதுசெய்யும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இம்மாதம் 4ஆம் தேதி சோலில் அந்தப் பெண்ணைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து காவல்துறை அதிகாரிகள் பெண்ணின் கைப்பேசி இருந்த இடத்தை அடையாளம் கண்டனர்.
அதே நாள் பிற்பகல் 2 மணியளவில் குளிர்பதனப் பெட்டியின் வாயிலில் உறைந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பெட்டியின் தட்பநிலை உறைநிலைக்குக்கீழ் பல மடங்குக் குறைவாக இருந்ததாகக் கூறப்பட்டது.
பெண் காணாமற்போன நேரத்தில் உணவு, பானக் கடையின் உரிமையாளர் அவருடன் இருந்ததால் காவல்துறை அதிகாரிகள் அந்த ஆடவரைச் சந்தேக நபராக அடையாளம் கண்டதாகக் கூறினர்.
இம்மாதம் 3ஆம் தேதி மாண்டுகிடந்த பெண்ணும் சந்தேக நபரும் உணவு, பானக் கடையில் முதன்முறையாகச் சந்தித்துக்கொண்டதாக நம்பப்படுகிறது.
பரிசுப் பற்றுச்சீட்டுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அந்தப் பெண் ஆடவரைச் சந்தித்தாகத் தெரிகிறது. அவர் பரிசுப் பற்றுச்சீட்டுகளை ரொக்கமாக மாற்றித் தருவதில் ஈடுபட்டிருந்தார்.
காவல்துறை அதிகாரிகள் குளிர்பதனப் பெட்டிக்குள் பத்து பில்லியன் வான் மதிப்பிலான போலி அங்காடிக் கடை பற்றுச்சீட்டுகளைக் கண்டுபிடித்தனர்.


