லண்டன்: கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக வந்த தகவலை அடுத்து, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கடல்துறை அமைப்பு ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் தனது நடவடிக்கையை ஜூன் 25ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தியது.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட ஒப்பந்தம் குறித்த அச்சங்களை இந்நடவடிக்கை மீண்டும் தூண்டியுள்ளது.
தான் அங்கீகரிக்காத வழித்தடங்களில் கப்பல்கள் செல்வதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களிலேயே, ஓமன் அருகே ஏவுகணை பாய்ச்சப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்தக் கப்பலின்மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் இருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
தாக்கப்பட்ட கப்பல், சிங்கப்பூர்க் கொடியேந்திய ‘எவர் லவ்லி’ (Ever Lovely) எனும் கப்பல் என அடையாளம் வெளியிட விரும்பாத நான்கு தரப்புகள் கூறுகின்றன.
ஆளில்லா வானூர்தி மூலம் இக்கப்பல் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்பு வட்டாரம் ஒன்று தெரிவித்தது. இது குறித்து அமெரிக்க அரசாங்கம் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
போரை முடிவுக்குக் கொண்டு வந்து நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை ஈரான் மதிக்காவிட்டால், அமெரிக்கா மீண்டும் அந்நாட்டின் மீது குண்டுவீசத் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இம்மாதத் தொடக்கத்தில் எச்சரித்திருந்தார்.
“எங்களது வெளியேற்றப் பட்டியலில் உள்ள கப்பல்களுக்கும், அப்பகுதியில் உள்ள அனைத்துக் கப்பல்களுக்கும் தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்வதை மீண்டும் உறுதிசெய்வதற்காக இந்த நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அனைத்துலகக் கடல்துறை அமைப்பின் தலைமைச் செயலாளர் ஆர்செனியோ டொமிங்குவேஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களை ஈரான் அச்சுறுத்தினால் அல்லது தடுத்தால் சிக்கல்கள் ஏற்பட நேரிடும் என்று அவர் கூறியினார்.

