ஜோகூர் பாரு: எம்பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் மலேசியாவில் 46 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
அவர்கள் அனைவருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இதுவரை ஒன்பது பேருக்கு மட்டுமே குரங்கம்மை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்த ஒன்பது பேருக்கும் கடந்த ஆண்டில் அந்நோய் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து மலேசியாவுக்குள் வரும் ஏறத்தாழ 5.2 மில்லியன் பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஸுல்கிஃப்லி கூறினார்.
“இதற்கு முன்பு மலேசியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் கிலேட் 2 கிருமி வகை தொற்றியது. கிலேட் 2 கிருமி வகையைவிட கிலேட் 1 அதிகளவில் பரவக்கூடியது. மலேசியாவில் ஆகக் கடைசியாக 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டது,” என்றார் அமைச்சர் ஸுல்கிஃப்லி.
மலேசியாவுக்கு வரும் பயணிகள் அனைத்துலகச் சோதனைச்சாவடிகளில் பரிசோதிக்கப்பட்டாலும் குடிநுழைவுப் பணிகளில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.