தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோலாலம்பூர், பினாங்கு விமான நிலையங்களில் கூடுதல் தானியக்க வாயில்கள்

2 mins read
2ebe23fe-caa7-411f-ba16-8a83cffbb641
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையங்கள் 1லும் 2லும் தலா 40 புதிய தானியக்க வாயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புத்ராஜெயா: கோலாலம்பூர், பினாங்கு அனைத்துலக விமான நிலையங்களில் நெரிசலைக் குறைக்க புதிய தானியக்க வாயில்களை அதிகரிக்க குடிநுழைவுத் துறையுடன் இணைந்து மலேசிய உள்துறை அமைச்சு செயல்படும்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையங்கள் 1லும் 2லும் தலா 40 புதிய தானியக்க வாயில்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுஷன் இஸ்மாயில் திங்கட்கிழமை (ஜூலை 22) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். பினாங்கு விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்திற்கு (ஆசியான்) அடுத்த ஆண்டு மலேசியா தலைமை தாங்கவிருப்பதையும் ‘விசிட் மலேசியா இயர் 2026’ இயக்கத்தையும் முன்னிட்டு இரு விமான நிலையங்களில் தானியக்க வாயில்களை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திரு சைஃபுடின் கூறினார்.

குறைந்த அபாயம் உடைய மேலும் 36 நாடுகளையும் வட்டாரங்களையும் சேர்ந்த பயணிகள், மலேசியாவின் விமான நிலையங்களில் ஜூன் 1 முதல் தானியக்க வாயில்களைப் பயன்படுத்தலாம் என அமைச்சர் சைஃபுடின் முன்னதாகக் கூறியிருந்தார்.

இதற்கிடையே, ஜோகூர் பாருவின் இரு நிலவழி சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டு முறைக்குப் பயனாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.

ஜூலை 1 முதல் 18 வரை, சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் வழியாகச் சென்ற மொத்தம் 197,901 பேருந்து பயணிகளும் சுல்தான் அபு பக்கர் காம்பிளக்ஸ் வழியாகச் சென்ற 311,130 பேருந்து, மோட்டார்சைக்கிள் பயணிகளும் கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தினர்.

“இத்திட்டம் காத்திருப்பு நேரத்தை 70 முதல் 80 விழுக்காடு வரை குறைத்துள்ளது. மலேசியா-சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்க இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் அமைச்சர் சைஃபுடின்.

குறிப்புச் சொற்கள்