கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரில் உள்ள சாலை மேம்பாட்டுக்கு மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவதைப் போல் அல்லாமல் அதிக நிதி தேவை என்று மலேசியப் பிரதமர் அலுவலக (கூட்டரசுப் பகுதி) அமைச்சர் ஹன்னா இயோ திங்கட்கிழமை (மார்ச் 16) தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அதன் சாலைக் கட்டமைப்பை முறையாகப் பராமரிக்க அந்தக் கூடுதல் நிதி பயன்படும் என்று அவர் விளக்கினார்.
மற்ற மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் மலேசியாவின் சாலைப் பதிவு தகவல் திட்டம் (Marris) பரிந்துரைக்கும் நிதி வழங்கப்படுகிறது. ஆனால், சாலைப் பராமரிப்புக்கென அரசாங்கத்திடமிருந்து நேரடியாக கோலாலம்பூர் நகர மன்றத்துக்கு S$10.7 மில்லியன் (33 மில்லியன் ரிங்கிட்) மட்டுமே வழங்கப்படுகிறது.
“ஒரு நாளில் ஒரு மில்லியன் வாகனங்கள் தலைநகருக்குள் நுழைகின்றன.
“எனவே இந்த வழங்குதொகை கோலாலம்பூரில் உள்ள சாலைகளைப் பராமரிக்கப் போதாது,” என்று அமைச்சர் ஹன்னா குறிப்பிட்டார்.
அண்மையில் நடந்த தேசிய நிதி மன்றக் கூட்டத்தில் இதுபற்றி பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் தாம் விவரித்ததாகவும் அவர் கூறினார்.

