கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்துள்ள நிறுவனங்களும் வெளிநாட்டுப் பணிப்பெண்களைச் சார்ந்திருக்கும் குடும்பங்களும் அதிக நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்களும் பணிப்பெண்களும் சிங்கப்பூர் வர அனுமதிப்பது அந்நெருக்கடியைக் குறைக்க உதவும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு செய்தியாளர் சந்திப்பில் இவர் இன்று இதனை தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு பாதுகாப்பான முறையில் வரவழைக்கப்படுவதை உறுதிசெய்ய மனிதவள அமைச்சு, வர்த்தக தொழில் அமைச்சு மற்றும் இதர அமைச்சுகளும் ஒன்றாக சேர்ந்து பாதுகாப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் என்றார்.
சிங்கப்பூருக்குள் அவர்கள் நுழையும் கட்டத்தில் தொடங்கி, தனிமைப்படுத்தும் உத்தரவு அணுகுமுறைகள், தங்குவிடுதிகளிலும் வேலையிடங்களிலும் இருக்கும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் ஆகியவற்றை இது உள்ளடக்கும்.
வெளிநாட்டு ஊழியர்களின் தாய்நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் விகிதமும் அங்குள்ள கொவிட்-19 நிலவரமும் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களை இங்கு அனுமதிப்பதற்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அமைச்சர் கான் கூறினார்.
"சிங்கப்பூரின் பொருளாதாரம் மீட்படைய சிங்கப்பூருக்குள் வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிப்பது முக்கியம். பொது மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிசெய்யும் அதே வேளையில் இதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்," என்று அமைச்சர் கான் வலியுறுத்தினார்.
இதனிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான பொதுச் சுகாதார நெறிமுறைகளை அரசாங்கம் திருத்தியமைக்கும் என்று நிதி அமைச்சரும் பணிக்குழுவின் இணைத் தலைவருமான லாரன்ஸ் வோங், செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
"தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டும் பங்கேற்கும் பெரிய அளவிலான ஒன்றுகூடல்களை அனுமதிக்க முடியும்; அச்சூழல்களில் சமூக இடைவெளி விதியையும் தளர்த்த இயலும்," என்று திரு வோங் கூறினார்.
கொரோனா தொற்று நிரந்தர நோயாக இருந்துவிடக்கூடும் என்பதால் சிங்கப்பூர் அதனை எதிர்கொள்ளும் அணுகுமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதனுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கான் கேட்டுக்கொண்டார்.

