விமான விபத்துகளில் அதிகமானோர் மரணமடைந்தனர்

விமான விபத்துகளில் அதிகமானோர் மரணமடைந்தனர்

2 mins read
2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 38.7 மில்லியன் பயணங்களில் 51 விமான விபத்துகள் நடந்துள்ளதாக சங்கத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன
95d3d4cc-dae5-43ad-9a72-e15dbf022ad9
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் காணப்பட்ட விமானப் பாகங்கள். - படம்: ஏஎஃப்பி

அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் (IATA) திங்கட்கிழமை (மார்ச் 9) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் குறைவான விமான விபத்துகள் ஏற்பட்டிருந்தாலும் அதிக அளவில் பயணிகள் மரணமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 38.7 மில்லியன் பயணங்களில் 51 விமான விபத்துகள் நேர்ந்ததாக சங்கத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

மரண எண்ணிக்கை உயர்ந்ததற்கு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடந்த இரு விமான விபத்துகளே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் நடந்த எட்டு மோசமான விபத்துகளில் 394 பேர் பலியாகிவிட்டனர். அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் மரணமடைந்த 244 பேரைவிட அதிகமாகும் என்று ஐஏடிஏ கூறியது.

இந்தியாவின் அகமதாபாத் நகரில் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர்.

அதே ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்துக்கும் ஒரு ராணுவ ஹெலிகாப்டருக்கும் இடையே நடந்த விபத்தில் விமானத்தில் இருந்த 64 பயணிகள் மரணமடைந்தனர்.

விமானங்களில் நடந்த மரணங்கள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்திய விமான விபத்தில் தரையில் இருந்தபோது பலியான 19 பேரும், அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த விபத்தில் ஹெலிகாப்டரில் மாண்ட மூன்று ராணுவ வீரர்களும் எண்ணிக்கையில் உள்ளடங்கவில்லை.

ஒவ்வொரு பேரிடருக்கான அறிக்கைகள் தற்போது தயாராகி வருகின்றன.

ஐஏடிஏ வெளியிட்ட தகவல்களின்படி, 1 மில்லியன் விமான விபத்துகளில் 1.32 விபத்துகள் நடந்துள்ளன. அதன்படி, 759, 646 விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படும்போது, ஒருமுறை ஒரு விமான விபத்து நிகழ்கிறது.

குறிப்புச் சொற்கள்