மாஸ்கோ: உக்ரேனியப் பூசலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மாஸ்கோ 700,000 பிள்ளைகளை ரஷ்யப் பகுதிக்குள் கொண்டுசென்றிருப்பதாக ரஷ்ய மேலவையின் அனைத்துலகக் குழுத் தலைவர் கெரகரி காராசின் கூறியிருக்கிறார்.
அண்மைய ஆண்டுகளில் 700,000 பிள்ளைகள் உக்ரேனில் பூசல்கள் நிலவும் பகுதிகளில் ஏற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க தங்களிடம் அடைக்கலம் நாடியதாக அவர் டெலிகிராமில் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை மேற்கொண்டது.
உக்ரேனிலிருந்து ரஷ்யப் பகுதிக்குள் பிள்ளைகளைக் கொண்டுசெல்லும் அதன் திட்டம், பூசல் நிலவும் பகுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளையும் பிள்ளைகளையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டுள்ளதாக மாஸ்கோ கூறியது.
இருப்பினும், பல பிள்ளைகள் சட்டவிரோதமாக நாடுகடத்தப்பட்டிருப்பதாக உக்ரேன் கூறுகிறது. அதோடு, ஆயிரக்கணக்கான பிள்ளைகள் வலுக்கட்டாயமாகத் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
அதிகமான மக்களும் பிள்ளைகளும் போர்க்காலத்தின் முதல் சில மாதங்களில் வெளியேற்றப்பட்டனர். கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உக்ரேன் அதன் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதற்கு முன்னர் அந்த வெளியேற்றம் இடம்பெற்றது.

