அட்லாண்டா: அமெரிக்காவின் ஜியோர்ஜியா மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் செப்டம்பர் 4ஆம் தேதியன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் இரண்டு மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மாண்டனர்.
ஒன்பது பேர் காயமடைந்தனர்,
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் 14 வயது கோல்ட் கிரே.
நான்கு பேரைச் சுட்டுக் கொன்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு அமெரிக்க நேரப்படி காலை 10.20 மணிக்கு நிகழ்ந்ததாகவும் அதற்கு முன்பு காலை 9.50 மணிக்குக் கிரேயின் தாயாரான மார்சீ கிரே பள்ளியுடன் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலைத் திருவாட்டி கிரேயின் சகோதரியான ஏனி பிரவுன் தெரிவித்தார்.
பள்ளியை எச்சரிக்கத் தமது சகோதரி பள்ளியுடன் தொடர்புகொண்டதாகத் திருவாட்டி பிரவுன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
எதைப் பார்த்துத் திருவாட்டி கிரே பள்ளியுடன் தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுத்தார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
தாக்குதல்களுக்கான அறிகுறிகள், விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால் இச்சோக நிகழ்வைத் தடுத்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டைத் தடுக்க கிடைத்த வாய்ப்பை சம்பந்தப்பட்ட அனைவரும் எவ்வாறு நழுவவிட்டனர் என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்படுகிறது.

