கோத்தா கினபாலு: மலேசியாவின் மூன்றாவது உயரமான மலையாகத் தம்புனானின் சின்சிங் மலையை சாபா மாநில வனத்துறை அறிவித்தது.
கடல் மட்டத்திலிருந்து அதனுடைய உயரம் 2,586 மீட்டர் எனவும் அது தெரிவித்தது.
வன ஆராய்ச்சி மையமான செபிலோக்கின் ஆய்வுக் குழுவும் கம்போங் நுபாகன் சமூக மன்றத்தின் பிரதிநிதிகளும் இணைந்து மே 10ஆம் தேதி நடத்திய ஆய்விலிருந்து இந்த உயர அளவீட்டுத் தரவைப் பெற்றதாக சாபா வனத்துறைத் தலைமை அதிகாரி தெரிவித்தார்.
‘ஸ்டோனெக்ஸ் எஸ்900ஏ’ என்னும் உலகளாவிய திசைகாட்டும் செயற்கைக்கோள் கருவியைப் (ஜிஎன்எஸ்எஸ்) பயன்படுத்தி சின்சிங் மலையின் உயரத்தை அளவிட்டதாக அவர் கூறினார்.
பின்பு, மலையின் உயரத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்காக உரிமம் பெற்ற கணக்கெடுப்பு நிறுவனத்திற்கு அந்தத் தரவுகள் அனுப்பப்பட்டன.
அந்த நிறுவனமும் மலைகளை அளவிடும் வழிமுறைகளைப் பயன்படுத்தி, சின்சிங் மலையின் உயரம் 2,586 மீட்டர் எனக் கண்டறிந்தது. இதன்மூலம் மலேசியாவின் மூன்றாவது உயரமான மலையாக அது தன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது என்று அந்த அதிகாரி வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.

