மலேசியாவின் பாகாங் மாநிலத்தைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் ஒருவர், டோட்டோ 4D குலுக்கலில் 23.3 மில்லியன் ரிங்கிட் (S$6.9 மில்லியன்) வென்றுள்ளார்.
ஆனால், அந்தப் பெருந்தொகையில் சிறிதளவையும் தாம் வைத்துக்கொள்ளப் போவதில்லையாம். மாறாக, அதை முற்றிலுமாக தம் பிள்ளைகளிடம் கொடுத்துவிட அவர் முடிவெடுத்ததாக தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
ஜூலை 24ஆம் தேதி ‘9938’, ‘8388’ எண்களில் இரு குலுக்கல் சீட்டுகளை வாங்கியதாக அந்த ஆடவர் சொன்னார். தம் மனைவியின் கார் பதிவு எண்களை அவை ஒத்திருந்ததால் தாம் அதிர்ஷ்டத்தை உணர்ந்ததாக அவர் கூறினார்.
“எனக்கு வயதாகிவிட்டதால் எனக்கு இவ்வளவு பணம் தேவையில்லை. எனவே, அதை என் பிள்ளைகளிடம் வழங்கினால், தங்கள் தொழில்களை விரிவுபடுத்த அவர்கள் அதைப் பயன்படுத்துவதோடு, இன்னும் வசதியாக வாழலாம்,” என்றார் அவர்.
அந்த மருத்துவருக்கு எத்தனை பிள்ளைகள் உள்ளனர் என்பது பற்றித் தெரியவில்லை.
பந்தயம் கட்டும் நடைமுறையை தாம் ரசிப்பதாகச் சொன்ன அவர், இந்த ‘ஜாக்பாட்’ தொகை தமக்கு ஓர் ஊக்கத்தொகை மட்டுமே என்றார்.

