லண்டன்: பல அடுக்கு முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு, உலகளாவியச் சுகாதாரத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் என தி லான்செட் மருத்துவ சஞ்சிகையில் 43 நிபுணர்களால் எழுதப்பட்ட புதிய தொடர் ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
மேலும், உடனடியாக அதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும் என்றும் நிபுணர்கள் அதில் வலியுறுத்துகின்றனர்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு சக பேராசிரியர்களுடன் இணைந்து ‘பல அடுக்குப் பதப்படுத்தப்பட்ட உணவு’ (Ultra processed food) எனும் பதத்தைப் பிரேசிலியப் பேராசிரியர் கார்லோஸ் மான்டீரோ உருவாக்கினார்.
அவர் உட்பட பல ஆய்வாளர்கள் தற்போது அவ்வகை உணவுகள் உலகளவில் அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர்.
உணவுத் தரம் குறைந்து வருவதற்கும் உடல் பருமன் முதல் புற்றுநோய் வரை பல நோய்களின் பாதிப்பு அதிகரிப்பதற்கும் அது ஒரு காரணி என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
“இந்தக் கட்டுரைகள் இன்று நம்மிடம் உள்ள ஆதாரங்களைப் பற்றியது. பல அடுக்கு முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மனிதர்களின் உடல்நலம் தொடர்புடையவை,” என்று சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்லோஸ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) நடந்த இணைய மாநாடு ஒன்றில் கூறினார்.
மேலும், பாதிப்புகளிலிருந்து மனித உயிர்களைப் பாதுகாக்க உலகளாவிய பொது நடவடிக்கை தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

