இந்தியாவில் உள்ள மூன்று டுவிட்டர் அலுவலகங்களில் இரண்டு மூடப்பட்டன. அந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். செலவுகளை குறைக்கவும், டுவிட்டர் தளத்தை லாபகரமான நிறுவனமாக மீண்டும் வழிநடத்தவும் இந்த நடவடிக்கையை எலான் மஸ்க் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுடெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்கள் மூடப்பட்டன. பெங்களூரில் உள்ள அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என்று கூறப்பட்டது.
சென்ற ஆண்டு இந்தியாவில் பணிபுரிந்த கிட்டத்தட்ட 200 டுவிட்டர் ஊழியர்களில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
டுவிட்டரின் தலைமை நிர்வாகி அதிகாரியான எலான் மஸ்க் பதவி ஏற்றுக்கொண்டதிலிருந்து உலகெங்கும் உள்ள பல டுவிட்டர் அலுவலகங்களை அவர் மூடிவிட்டார். அத்துடன், ஊழியர்கள் பலரையும் அவர் பணிநீக்கம் செய்துவிட்டார்.


