நேப்பிடோ: மியன்மார் உள்நாட்டுப் போர் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துவரும் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க் களத்தில் அந்நாட்டு ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கியுள்ள நிலையிலும் வட்டார அளவில் பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரி நெருக்குதல் இருந்துவரும் வேளையிலும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு தலைதூக்கியுள்ளது.
‘உடன்பாட்டிற்குத் தயார்’
அந்நாட்டில் உள்ள பெரும்பாலான ஆயுதம் ஏந்திய குழுக்களையும் கடைசியாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் சில அம்சங்களை உள்ளடக்கிய நிழல் அரசாங்கத்தையும் ஒன்றுசேர்க்கும் அமைப்பின் நிலைப்பாட்டில் இந்த மாற்றம் தென்படுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். எஸ்சிஇஎஃப் எனப்படும் அந்த அமைப்பு, அரசியல்ரீதியாக ஒப்பந்தம் காணத் தயாராய் இருப்பதாகக் கூறியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்திய பிறகு அந்த அமைப்பு இதனைத் தெரிவித்தது.
ராணுவத் தலைவராக இருந்து மியன்மாரின் அதிபராகப் பொறுப்பேற்ற மின் ஆவ்ங் ஹ்லாய்ங் சமரசப் பேச்சுவார்த்தை தொடர்பில் எஸ்சிஇஎஃப் அமைப்பைப் பங்காளியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை, அவர் இவ்வாரம் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்வது, போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட பல தரப்பினர் முயற்சியில் இறங்குவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
எனினும், அரசியல்ரீதியான பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியம் இன்னமும் குறைவாக இருப்பதாக சில வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம், நிலைமை தற்போது பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான பேச்சுகளை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
குடிமக்களின் கைகளை ஓங்கச் செய்து மியன்மாரின் அரசாங்கத்திலிருந்து அந்நாட்டு ராணுவத்தை ஒட்டுமொத்தமாக விலகச் செய்வதே எஸ்சிஇஎஃப் அமைப்பின் குறிக்கோள் என்று அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் மியன்மார் அகதிகள்
இதற்கிடையே, 5,000 மியன்மார் அகதிகளை நாடுகடத்தினால் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து இருக்கும் என்று தெரியவந்தால் தாங்கள் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று புதன்கிழமை (ஆகஸ்ட் 5) மலேசிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


