யங்கூன்: மியன்மாரில் சிறுபான்மை இன சமூகத்தைச் சேர்ந்த போராளிக் குழுக்கள் அந்நாட்டு ராணுவம்மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தியிருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும், அரசு ஊழியர்களை அவசர நிலைக்குத் தயாராக இருக்க வேண்டும் எனவும் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் அரசாங்கத்திற்குச் சேவை செய்யத் தயார்நிலையில் இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மியன்மாரில் ராணுவத்துக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையேயான போர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஆனால், 2021ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு ராணுவ எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கிடையே ஓர் ஒருங்கிணைப்பைக் கொண்டு வந்தது.
சிறுபான்மை இன சமூகத்தைச் சேர்ந்த போராளிகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இருக்கும் இணக்கம் அந்நாட்டு இராணுவத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
மியன்மாரின் வடகிழக்குப் பகுதியான ஷான், கிழக்குப் பகுதியான கயாஹ், மேற்குப் பகுதியான ரக்கைன் ஆகிய மூன்று மாநிலங்களில் இருக்கும் அரசாங்க ராணுவ நிலைகள்மீது கணிசமான எண்ணிக்கையிலான ஆயுதமேந்திய போராளிகள் கடுமையான தாக்குதல் நடத்தியிருப்பதாக அந்நாட்டு ராணுவப் பேச்சாளர் ஜாவ் மின் துன் கூறினார்.
சில ராணுவச் சாவடிகள் காலி செய்யப்பட்டன என்றும் கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான குண்டுகளை இராணுவ நிலைகள் மீது வீசினர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“நாங்கள் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளத் தேவையான அவசரகால நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், ”என அவர் குறிப்பிட்டார்.