நேப்பிடாவ்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து, பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அந்நாட்டின் ராணுவம் அதிகரித்துள்ளது.
பூசல்களைக் கண்காணிக்கும் ‘ஏக்லேட்’ (ACLED) எனும் அமைப்பு திங்கட்கிழமை (ஜூலை 27) அந்தக் கருத்தைத் தெரிவித்தது.
வட்டார அளவில் அரசாங்கங்கள் அரசதந்திர கலந்துரையாடல்களை அதிகரித்துவரும் வேளையிலும், அந்நிலை நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மியன்மார் புதிய ராணுவத் தளபதியின் உத்திகள் அந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் என அந்த அமைப்பு கூறியது. கடந்த மார்ச் மாத இறுதியில் முன்னாள் ராணுவத் தளபதி நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்கத் தயாரானபோது, அவர் அப்பதவியைக் கைப்பற்றினார்.
“மியன்மாரை ஆளும் ராணுவம் மார்ச் மாதத்தில் அதன் ராணுவத் தளபத்திய அமைப்பை மாற்றி அமைத்ததிலிருந்து, பொதுமக்கள் ராணுவத்தின் மோசமான ஒடுக்குமுறைக்கும் தீவிரமான வான்வழி குண்டுவீச்சுக்கும் ஆளாகியுள்ளனர்,” என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
“ஒரே இலக்கைத் தொடர்ந்து தாக்குவதற்காக இரண்டு முதல் ஐந்து போர் விமானங்களைக் கொண்ட சிறப்புப் படைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது அந்த மாற்றங்களில் அடங்கும்,” என்று அது கூறியது.
அது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்ட கேள்விகளுக்கு மியன்மார் அரசாங்கப் பேச்சாளர் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
ஊடகங்கள், உள்ளூர்ப் பங்காளிகள், ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலகக் கண்காணிப்பு அமைப்புகள், உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் அறிக்கைகளிலிருந்து மியன்மாரில் நடந்துவரும் மோதல்கள் தொடர்பான தரவுகளை ‘ஏக்லேட்’ அமைப்பு சேகரிக்கிறது.
2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்ததை அடுத்து, மியன்மாரில் கடும் கொந்தளிப்பு நிலவியது.
அதன் காரணமாக, உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. அதில் கிட்டத்தட்ட 100,000 பேர் கொல்லப்பட்டதுடன் மில்லியன்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

