யங்கூன்: மியன்மார் ராணுவ அதிகாரிகள் 10,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்களை மோசடி நிலையங்களிலிருந்து கைது செய்துள்ளனர்.
கடந்த ஒன்பது மாதங்களாக நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைய மோசடிகளில் ஈடுபட சட்டவிரோதக் கும்பல்கள் மியன்மாரின் பல பகுதிகளிலிருந்து செயல்படுகின்றனர். அவர்கள் வெளிநாட்டவர்களைச் சட்டவிரோதமாக மியன்மாருக்குள் அழைத்து வந்து வேலை செய்யவைக்கின்றனர்.
சீனா மற்றும் தாய்லாந்தின் உதவியோடு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 10,119 பேர் மோசடி நிலையங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9,340 பேர் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
எஞ்சியோரும் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மியன்மாரில் செயல்படும் மோசடி நிலையங்களால் உலக மக்களுக்குப் பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க உலக நாடுகள் பலவும் மியன்மாருக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
சட்டவிரோதக் கும்பல்கள் மியன்மார், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் பெரிய பெரிய கட்டடங்களில் மோசடி நிலையங்களை நடத்தி வருகின்றன.

