பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முழுமையான மன்னிப்பு வழங்கப்படாதது குறித்து மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக அவரது மகள் நூரியானா நஜிப் கூறியிருக்கிறார்.
சுங்கை புலோ சிறைச்சாலையில் தமது தந்தையைச் சந்தித்தபோது அவர் தன்னிடம் அவ்வாறு கூறியதாகத் திருவாட்டி நூரியானா சொன்னார்.
மன்னிப்பு வாரியம் திரு நஜிப்பிற்கு முழு மன்னிப்பை வழங்குவதற்குப் பதிலாக அவரது தண்டனைக் காலத்தை 12 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாகக் குறைத்தது.
திரு நஜிப் அபராதத் தொகையைச் செலுத்தினால் அவர் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார். அபராதத் தொகையும், 210 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டுக்குக் குறைக்கப்பட்டது.
மன்னிப்பு வாரியத்தின் முடிவை மதிப்பதாகக் கூறிய அவரது அம்னோ கட்சி, திரு நஜிப் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும்வரை தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்துள்ளது.