கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தமது சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி கோரித் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவை உலுக்கிய ‘1எம்டிபி’ ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து நஜிப் சிறைத்தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.
2024ல் அப்போதைய மன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியம், நஜிப்பின் சிறைத்தண்டனையைப் பாதியாகக் குறைத்தது.
இதனைத் தொடர்ந்து, தமது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்குமாறு அவர் சட்டரீதியாகக் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், அவரது கோரிக்கையைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு (2025) டிசம்பர் மாதம் நிராகரித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், அந்த மேல்முறையீட்டு மனுவை அவர் தற்போது திரும்பப் பெற்றுள்ளதாக ‘தி எட்ஜ்’ ஊடகம் தெரிவிக்கிறது. நஜிப்பின் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஆவணங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1எம்டிபி தொடர்பான நிதி முறைகேடு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நஜிப் குற்றம் சாட்டப்பட்டார்.

