கோலாலம்பூர்: தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக்காவலில் இருந்து நிறைவேற்ற வகைசெய்யும் ஆவணத்தை முன்னாள் மலேசிய மாமன்னர் அப்துல்லா அகமது ஷா தன்னிடம் கொடுத்தார் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறி வருகிறார்.
திரு அப்துல்லா அகமது ஷா மாமன்னர் பொறுப்பில் இருந்தபோது அந்த ஆவணம் தன்னிடம் வழங்கப்பட்டதாக நஜிப் சொல்கிறார்.
தன்னிடம் இருப்பதாக அவர் கூறும் ஆவணத்தை சட்ட ரீதியாக பரிசீலனை செய்யுமாறு நஜிப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த ஆவணத்தைப் பற்றிப் பொதுமக்கள் தங்களிடையே பேசிக்கொள்வதைத் தடை செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கும் முயற்சியை மலேசிய அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நஜிப்புக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை சென்ற ஆண்டு பாதியாகக் குறைக்கப்பட்டது; அப்போது முன்னாள் மாமன்னர் வழங்கிய ஆவணத்தை அதிகாரிகள் கருத்தில்கொள்ளவில்லை என்று நஜிப் குறை கூறி வருகிறார்.