புளோரிடா: நான்கு விண்வெளி வீரர்களுடன் நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலம் நிலவை நோக்கி வெற்றிகரமாகப் புறப்பட்டது.
விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சித் தளத்திலிருந்து புதன்கிழமை (ஏப்ரல் 1) புறப்பட்டது. அதாவது சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமைகிழமை (ஏப்ரல் 2) காலை 6.35 மணிக்கு விண்கலம் புறப்பட்டது.
நான்கு விண்வெளி வீரர்களும் நிலவை 10 நாள்கள் சுற்றிவருவார்கள். விண்கலம் கிட்டத்தட்ட 32 மாடி உயரம் கொண்ட கட்டடத்தின் அளவில் இருந்தது. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த மூவரும் கனடாவைச் சேர்ந்த ஒருவரும் இருந்தனர்.
நிலவில் மீண்டும் மனிதர்களைக் களமிறக்கும் நடவடிக்கையில் நாசா தீவிரமாக உள்ளது. அதன் முதல் பகுதியாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
மேலும் விண்வெளித் துறையில் சீனாவின் அண்மைய வளர்ச்சிக்குப் போட்டி கொடுக்கும் விதமாகவும் அமெரிக்கா செயல்படுகிறது.
நிலவில் ஒரு தளத்தை அமைக்க நாசா திட்டமிடுகிறது. இனி அடுத்தடுத்து நிலவை நோக்கி அமெரிக்கா பயணங்களை மேற்கொள்ளக்கூடும்.
இதற்கு முன்னர் 1972ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவில் கால் பதித்தனர். அதன்பின்னர் அதாவது கிட்டத்தட்ட 53 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவின் அருகே இவ்வளவு நெருக்கமாகச் செல்லும் முதல் குழு இது.
ஆர்டெமிஸ் 4 என்று அழைக்கப்படும் விண்வெளித் திட்டத்தை 2028ஆம் ஆண்டில் நிறைவேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆர்டெமிஸ் 4 என்பது விண்வெளி வீரர்களை நிலவின் தென் துருவத்தில் கால்பதிக்க வைப்பதாகும்.
தொடர்புடைய செய்திகள்
சீனா, நிலவின் தென் துருவத்தில் 2030ஆம் ஆண்டு துவக்கத்தில் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆர்டெமிஸ் 2 பயணத்திற்காகக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நான்கு விண்வெளி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர் என்று நாசா தெரிவித்தது.
2017ஆம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும் அதற்காகப் பல பில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த 10 ஆண்டில் நிலவில் அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பதை உறுதி செய்யவும் அங்கிருந்து செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லவும் நாசா திட்டமிட்டுள்ளது.

