சிரம்பான்: அடுத்த ஆண்டிலிருந்து மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் குடியிருப்புப் பகுதிகளில் தங்க முடியாது.
அப்படிக் குடியிருப்புப் பகுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் மையப்படுத்தப்பட்ட ஊழியர் தங்குவிடுதிகள் (சிஎல்கியூ) அல்லது வணிக வட்டாரங்களுக்கு இடமாற வேண்டும் என்று மாநில உள்ளூர் அரசாங்க மேம்பாடு, வீடமைப்பு, போக்குவரத்துக் குழுவின் தலைவர் ஜே. அருள் குமார் தெரிவித்துள்ளார்.
பண்டார் பாரு நிலாய், லாட்ஜ் ரெசிடன்ஸ் பகுதியில் உள்ள ஒரு சிஎல்கியூ விடுதிக்குத் தான் சென்று பார்வையிட்டதாகவும் அங்கு 3,500 ஊழியர்கள் தங்கும் வகையில் 1,000 அறைகள் உள்ளதாகவும் திங்கட்கிழமையன்று (ஜனவரி 29) திரு அருள் கூறினார்.
ஏற்கெனவே 20-30 நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களை லாட்ஜ் ரெசிடன்ஸ் பகுதிக்கு இடமாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிஎல்கியூ விடுதிகளை அமைக்க பல நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன என்றும் அவர்களுக்கு மாநில அரசு உதவும் என்றும் திரு அருள் சொன்னார்.
இதன்மூலம், குடியிருப்புப் பகுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் தொல்லை கொடுப்பது முடிவிற்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.