எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மலேசியரை நேப்பாள மலையேறி வழிகாட்டிகள் இருவர் காப்பாற்றியுள்ளனர்.
‘டெத் சோன்’ என்றழைக்கப்படும் கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய உயரமான இடத்தில் இருந்து அந்த மலேசியரை மீட்டுள்ளனர் மலையேறி வழிகாட்டிகள்.
சீன மலையேறி ஒருவருடன் மே 18ஆம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறியுள்ளார் ஜெல்ஜி செர்ப்பா என்னும் 30 வயது நேப்பாள மலையேறி வழிகாட்டி.
அப்போது ‘டெத் சோன்’ பகுதியில் ஒரு மலேசிய மலையேறி கயிற்றில் தொங்கியபடி கடும்குளிரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி ஜெல்ஜி அந்த மலேசியரை மலையில் இருந்து 600 மீட்டர் கீழே கொண்டுவந்தார்.
அதன் பின்னர் நிமா தாஹி செர்பா என்னும் மற்றொரு மலையேறி வழிகாட்டி மீட்புப்பணியில் சேர்ந்துகொண்டார்.
மலேசிய ஆடவரை மெத்தையில் சுருட்டி ‘கேம்ப்-3” என்ற இடத்திற்கு கொண்டு வந்ததாக மலையேறி வழிகாட்டிகள் கூறினர்.
அதன் பின்னர் ஹெலிகாப்டர் உதவியால் மலையடிவாரத்திற்கு மலேசியர் கொண்டு செல்லப்பட்டார்.
இது அரிது, அந்த உயரத்தில் ஒருவரை மீட்பது என்பது செய்யமுடியாத காரியங்களில் ஒன்று என்று அதிகாரிகள் கூறினர்.
சீன மலையேறி எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியை கைவிட்டு மீட்புப் பணிகளுக்கு அனுமதி வழங்கியதால் ஒருவரின் உயிர் இப்போது காப்பாற்றப்பட்டுள்ளதாக ஜெல்ஜி கூறினார்.