ஜெருசலம்: ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்காவுடனான முழு ஒத்திசைவுடன் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றின் வழியாக அவர் அவ்வாறு கூறினார்.
“இந்தச் செயல்பாட்டின் தொடக்கத்திலிருந்து ஈரானின் அணுவாயுத தளங்கள் எப்படியேனும் அழிக்கப்படும் என்று நான் வாக்குறுதி அளித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வாக்குறுதி நிறைவு செய்யப்பட்டுள்ளது,” என்று திரு நெட்டன்யாகு கூறினார்.
ஈரானின் அணுவாயுதத் திட்டம் ஈஸ்ரேலுக்கும் உலக அமைதிக்கும் மிரட்டல் விடுப்பதாகக் கூறிய திரு நெட்டன்யாகு, திரு டிரம்ப் இஸ்ரேலுக்கு வேறு எவரும் போல் அல்லாத நண்பர் எனப் புகழ்ந்தார்.
திரு டிரம்ப்பை வலிமைமிக்கத் தலைவர் எனப் பாராட்டிய திரு நெட்டன்யாகு, தமக்கும் திரு டிரம்ப்புக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் பற்றியும் தம் பதிவில் குறிப்பிட்டார்
“திரு டிரம்ப் என்னையும் நம் படைகளையும் நம் மக்களையும் ஆசிர்வதித்தார். நான் அவரையும் அமெரிக்க விமானிகளையும் மக்களையும் வாழ்த்தினேன்,” என்று திரு நெட்டன்யாகு கூறினார்.