சோல்: வடகொரியாவின் முக்கிய அணுவாற்றல் வளாகமான யோங்பியனில் புதிய யுரேனியம் செறிவூட்டும் ஆலை கட்டப்பட்டுள்ளது என்று அனைத்துலக அணுவாற்றல் முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.
இரண்டு மாடிக் கட்டடமான அந்த ஆலையில் யுரேனியத்தை வாயுவாக மாற்றக் கூடிய 28 இயந்திரங்கள் வரை அமைக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 2024ஆம் ஆண்டு தலைநகர் பியோங்யாங் அருகே உள்ள காங்சன் பகுதியில் கட்டப்பட்டப் புதியக் கட்டடத்தில் ஜனவரி மாதம் முதல் அணு ஆலை செயல்படத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
2009ஆம் ஆண்டு முதல் வடகொரியாவில் ஐஏஇஏ அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளவில்லை. ஆகவே, செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஜூன் மாதம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அங்கு சென்றபோது எடுக்கப்பட்டப் படங்களை ஒப்பிட்டு அந்த ஆலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத் தீர்மானங்களை மீறுகின்றன என்று முகமை சுட்டிக்காட்டியது.
வடகொரியாவின் ஆயுதத் தயாரிப்புக்கான அணுவாற்றல் உற்பத்தி மேலும் விரிவடைவது தங்களுக்குக் கடுமையான கவலையை ஏற்படுத்துகிறது என்று ஐஏஇஏ தலைமை இயக்குநர் ரஃபேல் கிராசி தெரிவித்துள்ளார்.

