நியூயார்க்: ஆப்பிரிக்கக் கண்டத்தை பெரியதாகவும் வட அமெரிக்கா, ஐரோப்பாவைச் சிறியதாகவும் சித்திரிக்கும் புதிய உலக வரைபடம் ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டங்களின் நிலப்பரப்புகளை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்ட அந்தத் தீர்மானத்திற்கு வெள்ளிக்கிழமை (செம்டம்பர் 4) நடந்த வாக்களிப்பில் ஆதரவாக 164 நாடுகள் வாக்களித்தன. ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமெரிக்கா எதிராக வாக்களித்தது.
‘சமநிலப்பரப்பு’ (ஈக்வல் எர்த்) என்று அழைக்கப்படும் புதிய வரைபடம், உலக நிலப்பரப்பின் துல்லியமான அளவைக் காட்டுவதாகத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1569ஆம் ஆண்டு ஃபிளெமிஷ் வரைபடவியலாளர் ஜெரார்டஸ் மெர்கேட்டரால் கடல் பயணங்களுக்காக வரையப்பட்ட உருளை வடிவ வரைபடக் கணிப்பு முறையைக் குறிக்கும் ‘மெர்கேட்டர்’ வரைபடத்திற்குப் பதிலாகப் புதிய வரைபடத்தைப் பயன்படுத்துமாறு ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.
வரைபடங்கள் கல்வியை வழிநடத்துவதுடன் மக்களின் கூட்டுப் பார்வையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று அத்தீர்மானத்தைக் கொண்டுவந்த டோகோ நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராபர்ட் டஸ்ஸி கூறினார்.
பூமியைத் தவறாகச் சித்திரிக்கும்போது, நிலவியல் ரீதியான பிழையான பிம்பங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஆபத்து உள்ளது என்றார் அவர்.
எனினும், அந்தத் தீர்மானத்தைக் கடுமையாகச் சாடியுள்ள அமெரிக்கா, இத்தகைய தேவையற்ற நடவடிக்கைகளாலேயே ஐநா தனது நம்பகத்தன்மையை இழந்து வருகிறது என்று குற்றம் சாட்டியது.


