நியூசிலாந்து ‘கிரேஹவுண்ட்’ எனப்படும் நாய் ஓட்டப் பந்தயத்தை 2026 முதல் தடை செய்யும் மசோதாவை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) தாக்கல் செய்துள்ளது.
பந்தயங்களில் காயமடையும் நாய்களின் விழுக்காடு கணிசமாக அதிகமாக இருப்பதாக அது கூறியது
இந்த விளையாட்டு நீண்ட காலமாக நாட்டில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது, சில வளர்ப்பாளர்கள் விலங்குகளை முறையற்று நடத்துவதாக அல்லது ஊக்கமருந்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
பந்தய நாய்களை மறுவாழ்வு செய்வதற்கும், தொழிலில் உள்ளவர்கள் மற்ற வேலைகளுக்கு மாறுவதற்கும் கால அவகாசம் கொடுக்கும் வகையில், அடுத்த 20 மாதங்களில் அந்தத் தொழில்துறையை மூடிவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது,
பந்தய நாய்களை தேவையில்லாமல் கொல்லுவதைத் தடுக்கும் மசோதாவை அரசாங்கம் செவ்வாயன்று தாக்கல் செய்தது. “அவசர நிலையில் சட்டம் நிறைவேற்றப்படும்” என்று நியூசிலாந்தின் துணைப் பிரதமர் பீட்டர்ஸ் கூறினார்.
இந்தப் பந்தயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேலும் சட்டம் தாக்கல் செய்யப்படும், என்றார்.
நாட்டில் இருக்கும் கிட்டத்தட்ட 2,900 பந்தய நாய்களுக்கு வீடு தேடித் தருவது அடுத்த முக்கியப் பணியாக இருக்கும்.
நியூசிலாந்தைத் தவிர, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் வணிக ரீதியான நாய் பந்தயம் அனுமதிக்கப்படுகிறது.