பேங்காக்: தாய்லாந்தில் புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசினின் மெய்க்காப்பாளராகக் காவல்துறை கர்னல் வாட்டன்யு வித்தயபலோதாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பல ஆண்டுகள் ஷினவாத் குடும்பத்தினருக்கு விசுவாசமான மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர்.
பூனைக்கு ஒன்பது உயிர்கள் எனச் சொல்லப்படுவதுபோல பல்வேறு கடினமான சூழல்களிலும் வேலைக்கு ஆபத்து நேராமல் தப்பியதால் இவரை ‘நைன் லைஃப் காப்’ எனச் செல்லமாகக் குறிப்பிடுவது வழக்கம்.
செவ்வாய்க்கிழமை, முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் தாய்லாந்து திரும்பியபோது டான் முவாங் விமான நிலையத்தில் இவர் காணப்பட்டார்.
வியாழக்கிழமை, தாய்லாந்தின் முன்னைய பிரதமர் ஜெனரல் பிரயுத் சனோச்சாவை சந்திக்கச் சென்ற புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசினின் மெய்க்காப்பாளராக கர்னல் வாட்டன்யு சென்றதைக் காண முடிந்தது.
முன்னாள் பிரதமர்கள் தக்சின் ஷினவாத், யிங்லக் ஷினவாத் இருவருக்கும் மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர் கர்னல் வாட்டன்யு.
2017ல் திருவாட்டி யிங்லக்கிற்கு ஊழல் தொடர்பில் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது அவர் நாட்டை விட்டு வெளியேற உதவியதாக கர்னல் வாட்டன்யு மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்குப் பிறகு பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் மேல்முறையீட்டை அடுத்து மீண்டும் பணியில் சேர்ந்தார்.

