கோலாலம்பூர்: பாஸ் கட்சியுடன் அம்னோ கூட்டணி அமைத்து ஜோகூர், நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் இல்லை என அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான அகம்மது ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் அம்னோ வலுவாகவே உள்ளது. கடந்த தேர்தலில் தேசிய முன்னணி தனித்து போட்டியிட்டது போல இப்போதும் தனித்து போட்டியிடும் என திரு ஸாஹிட் உறுதியளித்தார். கோலாலம்பூரில் உள்ள ஓர் உல்லாச விடுதியில் தேசிய முன்னணித் தலைவர்களும் பாஸ் கட்சியின் தலைவர்களும் ரகசிய சந்திப்பு நடத்தியதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் தேசிய முன்னணித் தலைவர்கள் அப்படியான சந்திப்புகளை மேற்கொள்ளவே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பாஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகளே இல்லை எனும் போது, திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும், ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் தேசிய முன்னணி தனிப்பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என்றும் திரு ஸாஹிட் தெரிவித்தார்.

