பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்தார்.
இருப்பினும், தமது அமைச்சு மெத்தனமாக இருந்துவிடப்போவதில்லை என்று அவர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மலேசியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, வெளிநாட்டுப் பயணங்களின்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பறவைகளைக் கொண்ட கால்நடைப் பண்ணைகள், ஈரச்சந்தைகள் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிகளில் விலங்கு மருத்துவச் சேவைத் துறையுடன் சுகாதார அமைச்சு இணைந்து செயல்படுவதாக அமைச்சர் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
மலேசியாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
“கடும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மலேசியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. உலகளாவிய நிலவரங்களை மலேசியா தொடர்ந்து கண்காணிக்கும். அவ்வாறு செய்வதன் மூலம் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி மலேசியர்களைப் பாதுகாக்க முடியும்,” என்று தி ஸ்டார் நாளிதழிடம் அமைச்சர் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
ஜப்பான் போன்ற சில நாடுகளில் பலருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது கூட்டமான இடங்களைத் தவிர்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மலேசியர்களை அவர் கேட்டுக்கொண்டார்.