அரசாங்க ஒப்பந்தங்களில் நேரடிப் பேச்சுக்கு அனுமதியில்லை: அன்வார் இப்ராகிம்

அரசாங்க ஒப்பந்தங்களில் நேரடிப் பேச்சுக்கு அனுமதியில்லை: அன்வார் இப்ராகிம்

2 mins read
7909452c-b26c-4c88-b5fe-44f42b4b0cf5
அரசாங்க கொள்முதல்கள் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தியுள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புத்ராஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அரசாங்கத்தில், ஒப்பந்தங்களுக்கான நேரடி பேச்சுவார்த்தைகளை தனது நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

நிதி அமைச்சருமான அவர், அனைத்துக் கொள்முதல்களும் வெளிப்படையான ஒப்பந்தக் குத்தகைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“நான் முன்பு நடந்தவற்றைத் தூய்மைப்படுத்த விரும்புகிறேன், முன்பு பேச்சுவார்த்தை அனுமதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளாகப் பிரதமராக உள்ள நான் அதற்கு அனுமதி அளிக்கவில்லை,” என்றார்.

“நேரடி பேச்சுவார்த்தையே கிடையாது. அனைத்தும் நிதி அமைச்சு பரிசீலித்த ஒப்பந்தக் குத்தகை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் தேசிய வக்கஃப் மாத தொடக்க விழாவில் அன்வார் குறிப்பிட்டார்.

பிரதமர் அன்வார், சர்ச்சைக்குரிய கரையோர போர்க் கப்பல் திட்டத்தை உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

“இது போன்ற வேலைகள் நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தும். பத்து ஆண்டுகளாகத் திண்டாடும் கப்பல்களை வாங்காதீர்கள். இது, நாட்டின் தற்காப்பு சம்பந்தப்பட்டது. வெளிப்படையான, நியாயமான விலைகளில் மட்டுமே கொள்முதல் நடக்க வேண்டும்,” என்று திரு அன்வார் மேலும் தெரிவித்தார்.

“இதில் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பது போன்ற உணர்வு சிலருக்கு ஏற்படலாம். அவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், நான் அதை அனுமதிக்க மாட்டேன், ஏனென்றால், அது நமது நாட்டின் பாதுகாப்பு அமைப்பைக் காட்டிக் கொடுத்து அழித்துவிடும்,” என்று அவர் மேலும் கூறினார்.

நவம்பர் 2022ல், பிரதமர் அலுவலக அதிகாரிகளுடனான தமது தொடக்க மாதாந்தரச் சந்திப்பின் போது, ​​கசிவுகள் மற்றும் ஊழல்கள் தொடர்வதைத் தடுக்க, ஒப்பந்தப்புள்ளி இல்லாமல் கொள்முதலைத் தமது நிர்வாகம் இனி அங்கீகரிக்காது என்று அன்வார் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபிரதமர்ஒப்பந்தப்புள்ளி

தொடர்புடைய செய்திகள்