ஹாங்காங்: ஈரான் போரால் உலகம் முழுவதும் விமானச் சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில், நாடு திரும்பவிரும்பும் பயணிகளுக்கு, மாற்று விமானச் சேவைகளுக்கோ ஹோட்டல்களில் தொடர்ந்து தங்குவதற்கோ தங்களது பயணக் காப்புறுதி பயன்படாது என்ற தகவல் கிடைத்துள்ளது.
‘அலியான்ஸ்’, ‘ஸுரிக் காப்புறுதிக் குழுமம்’ போன்ற பெரிய காப்புறுதி நிறுவனங்கள் வழக்கமான பயணக் கொள்கைகளின்கீழ், போர் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு இழப்பீடு வழங்குவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டையால், துபாய் உள்ளிட்ட வளைகுடா விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு விமான நிலையங்களுக்குக் குறைந்தது 23,000 விமானப் பயணங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இந்த நெருக்கடி மூலம், ஏறக்குறைய 31 பில்லியன் டாலர் மதிப்பிலான வருடாந்தரப் பயணக் காப்புறுதிச் சந்தையில் உள்ள இடைவெளி வெளிப்படுத்தப்படுகிறது.
கிட்டத்தட்ட அனைத்துக் கொள்கைகளிலும், போர் தொடர்பான கோரிக்கைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
விமானப் பயணங்கள் தாமதமடைந்தாலோ ரத்துசெய்யப்பட்டாலோ புதிய விமான நுழைவுச் சீட்டுகள், ஹோட்டல்கள், உணவு ஆகியவற்றுக்குப் பயணக் காப்புறுதிகள் இழப்பீடு வழங்கும்.
இருப்பினும், போரால் நேரடியாக ஏற்படும் இழப்புகளுக்கு வழக்கமான காப்புறுதிக் கொள்கைகள்படி இழப்பீடு வழங்கப்படாது என்று ஆஸ்திரேலியாவின் காப்புறுதி மன்றம் தெரிவித்தது.

