கோலாலம்பூர்: வழிபாட்டுத் தலங்களுக்கான நிலம் குறித்த விவகாரங்கள் மற்றும் இஸ்லாம் அல்லாத பிற சமயங்களின் நிர்வாகத்தை ஒருங்கிணைக்கும் பொருட்டு, மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்கு ஏற்ப, இஸ்லாம் அல்லாத மற்ற விவகாரங்களுக்கான நிர்வகிப்புச் செயற்குழுவை அனைத்து மாநிலங்களும் அமைத்துள்ளன.
சமய விவகாரங்கள், நில விவகாரங்கள் தொடர்பான அனைத்தும், மத்திய அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில், அதாவது மாநிலப் பட்டியலில் வழங்கப்பட்டுள்ளபடி, மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ டகாங் தெரிவித்தார்.
இவ்விவகாரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து மாநில அரசாங்கங்களும் சிறப்புச் செயற்குழுக்களை அமைத்துள்ளதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அன்று தமது ஃபேஸ்புக் பதிவில் திரு ஏரன் டகாங் கூறினார்.
பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறப்புச் செயற்குழு தொடர்பான சில விளக்கப் படங்களையும் திரு ஏரன் பதிவேற்றினார்.
வழிபாட்டுத் தலங்களின் நிலப் பயன்பாடு, நிர்வகிப்பு தொடர்பான எந்தவொரு விவகாரமும் மாநிலச் சட்டம், பேச்சுவார்த்தை, சமூக ஒருங்கிணைப்பு அணுகுமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்று பெர்னாமா செய்தி தெரிவித்தது.

