சோல்: வடகொரியப் பகுதியில் ‘0.001 மில்லிமீட்டர் கூட’ அத்துமீறப்பட்டால் போர் தொடங்கும் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஒத்துழைப்பையும், ஒருங்கிணைவையும் மேற்பார்வையிடும் அமைப்புகளை பியோங்யாங் மூடியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.
அந்த இரு நாடுகளின் கடல் எல்லைப் பகுதியை பியோங்யாங் அங்கீகரிக்காது என்று திரு கிம் கூறினார்.
இதற்கிடையே சோலில், தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், அணுவாயுத ஆயுதங்களைக் கொண்டுள்ள வடகொரியா சண்டையைத் தொடங்கினால், தென்கொரியா பல மடங்கு வலுவான பதிலடியைக் கொடுக்கும் என்று அவரது அமைச்சரவையிடம் கூறியிருக்கிறார். தமது ராணுவத்திற்கு உள்ள அளவுக்கு அதிகமான ஆற்றலை அவர் சுட்டினார்.
தென்கொரியாவுடனான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைவையும் மேற்பார்வையிடும் அமைப்புகளை மூடுவதற்கான முடிவை வடகொரிய நாடாளுமன்றம் அறிவித்ததாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் கூறியது.
இருதரப்புக்கும் இடையே பதற்றநிலையை அதிகரித்துள்ள அண்மைய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றது அது.
ஆக அதிகம் எதிர்க்கப்படும் நாடாக தென்கொரியாவை வருணிக்க புதிய சட்ட நடவடிக்கைகள் வரையப்படவேண்டும் என்று திரு கிம் கேட்டுக்கொண்டதாகவும் செய்தி நிறுவனம் கூறியது.