மாஸ்கோ: வடகொரியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் முதல் சாலைப் பாலம் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) திறக்கப்பட்டுள்ளது. புதிய பாலம், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே இருக்கும் வான்வழி, ரயில் போக்குவரத்து வசதிகளுடன் இணைந்துள்ளது.
இப்பாலம், எல்லை தாண்டிய போக்குவரத்தை மேலும் எளிதாக்குவதுடன், நாடுகளுக்கு இடையிலான வணிகம், பொருளியல், அறிவியல், தொழில்நுட்பம், கலாசார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று ரஷ்யப் பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின்தெரிவித்தார்.
காணொளி வாயிலாக நடந்த திறப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.
டுமென் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அந்த ஒரு கிலோமீட்டர் சாலைப் பாலம், இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வ பங்காளித்துவத்தின் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 1959ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட ‘நட்புப் பாலம்’ எனப்படும் ரயில் பாலத்திற்கு அருகில் இது அமைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வடகொரியா சென்றிருந்தபோது எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 2025 ஏப்ரலில் புதிய பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. 2024ல் குர்ஸ்க் பகுதியில் உக்ரேனின் ஊடுருவலை முறியடிக்க ரஷ்யாவிற்கு உதவ ஆயிரக்கணக்கான வீரர்களை வடகொரியா அனுப்பியிருந்தது.


