சோல்: சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் வடகொரியப் பயணத்தை முன்னிட்டு, வடகொரியா 10,000 டன் எடை கொண்ட ஒரு நாசகாரி போர்க்கப்பலைக் கட்டவும், ரகசியமாக நீருக்கடியில் இயங்கும் ஆயுதங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை (ஜூன் 6) தெரிவித்தன.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் மேற்பார்வையில் வியாழக்கிழமை நடைபெற்ற கடற்படை சோதனை குறித்து செய்தி வெளியிட்ட ரோடோங் சின்முன் நாளிதழ், காங் கோன் என்ற போர்க்கப்பலையும், சோ ஹியோன் என்ற மற்றொரு 5,000 டன் போர்க்கப்பலையும் கூடிய விரைவில் உருவாக்குமாறு அவர் கடற்படைக்கு உத்தரவிட்டதாகக் கூறியது.
அந்த நாளிதழ் மேல் விவரங்களை அளிக்கவில்லை.
10,000 டன் எடை கொண்ட நாசகாரி போர்க்கப்பலைக் கட்டும் திட்டத்தை வடகொரியா குறிப்பிடுவது இதுவே முதல் முறை என்று தென்கொரியாவின் தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின் கூறினார்.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஸி ஜின்பிங்கின் பயணத்திற்கு முன்னதாக, கிம் நாட்டின் ராணுவத் திறன்களை வெளிப்படுத்த முற்படலாம் என்று ஹாங் கூறினார்.
அணுவாயுதப் போரைத் தடுப்பதற்காக பியோங்யாங் தனது கடற்படைத் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அதே நேரத்தில் தரை, கடல் மற்றும் வான்வழி என அனைத்துத் துறைகளிலும் சக்திவாய்ந்த ராணுவத் திறன்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் வடகொரியத் தலைவர் கூறியதாக அந்த செய்தித்தாள் தெரிவித்தது.
தனது ஒரே முறையான ஒப்பந்த நட்பு நாடான பியாங்யாங்குடன் உறவுகளை மீண்டும் வலுப்படுத்த பெய்ஜிங் முயன்று வரும் நிலையில், ஸி ஜின்பிங் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தப் பயணம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, புதிதாகச் செயல்படத் தொடங்கிய அணுப் பொருள் உற்பத்தித் தொழிற்சாலையைப் பார்வையிட்டபோது, வடகொரியாவின் அணுவாயுதக் களஞ்சியத்தை ‘அதிவேகமாக’ விரிவாக்க வேண்டும் என்று கிம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார்.

