மாஸ்கோ: வடகொரியாவின் வெளியுறவு அமைச்சர் தனது ரஷ்யப் பிரதிநிதி செர்ஜி லாவ்ரோவ்வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) தெரிவித்தது.
சோ சோன் ஹுய்யும் அவரது குழுவினரும் சனிக்கிழமை பியோங்யாங்கிலிருந்து ரஷ்யாவிற்குத் தனிப்பட்ட விமானத்தில் புறப்பட்டுச் சென்றதாகக் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரேனிய போருக்குத் தீவிர ஆதரவளித்து வரும் தனது நட்பு நாட்டின் தூதர் மேற்கொள்ளும் இந்த வருகை குறித்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சு முன்னதாகவே அறிவித்திருந்தது.
கடந்த 2024ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பியோங்யாங்கிற்குச் சென்றிருந்தபோது இரு நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
உக்ரேனியப் போரில் ரஷ்யாவிற்கு உதவுவதற்காக வடகொரியா ஏவுகணைகள், ஆயுதங்கள் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கான வீரர்களையும் அனுப்பியுள்ளது.
இதற்குக் கைம்மாறாக, உலக நாடுகளிலிருந்து அரசதந்திர ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவிற்கு ரஷ்ய நிதி உதவி, ராணுவத் தொழில்நுட்பம், உணவு, எரிசக்தி ஆகியவற்றை வழங்கி வருவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவ், பல உயர் அதிகாரிகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் பியோங்யாங்கிற்குச் சென்றிருந்தார்.
2027 முதல் 2031 வரையிலான காலகட்டத்திற்கான கூட்டுறவுத் திட்டத்தில் கையெழுத்திட ரஷ்யா தயாராக இருப்பதாக பெலோசோவ் அப்போது தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த கூட்டுறவைத் தென்கொரியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்டித்துள்ளன.

