சியோல்: ஆண்டுதோறும் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் கூட்டுப் போர் பயிற்சிகள் கடந்த வாரம் நடந்தது.
அதற்குப் பதிலடியாக வடகொரியா சனிக்கிழமை (மார்ச் 14) அதன் பலவித ஏவுகணைகளைப் பாய்ச்சி சோதனைகள் நடத்தியது.
அதனைப் பார்வையிட வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன், அவரது மகள் கிம் ஜு ஆய் இருவரும் சென்றிருந்தனர் என்று அந்நாட்டு அதிகாரபூர்வ ஊடகம் கெசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒத்திகை சோதனையானது 420 கி.மீ. தாக்குதல் வரம்பிற்குள் உள்ள எதிரிகளுக்கு ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அணுஆயுதங்களின் அழிவுத்திறன் குறித்த ஆழமான புரிதலை அவர்களுக்கு வழங்கும் என்றும் வடகொரிய அதிபரான கிம் கூறினார்.
ராணுவ ஏவுகணைச் சோதனைக்கு திரு கிம்மின் மகள் கிம் ஜு ஆய் உடன் சென்றிருந்தார். திரு கிம்முக்குப் பிறகு, அவரது மகளான கிம் ஜு ஆய் தலைவர் பதவி ஏற்பார் என்று வடகொரிய அரசியல் ஆய்வாளர்களால் பரவலாகக் கருதப்படுகிறது.
கொரியா தீபகற்பத்தின் கிழக்குக் கடற்பகுதியில் இருந்து 364.4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தீவின்மீது குறிவைத்து அந்த ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன என்று கெசிஎன்ஏ தெரிவித்தது.
இதற்கு இடையே கடந்த வியாழக்கிழமை (மார்ச் 12) தென்கொரிய பிரதமர் கிம் மின்சியோக், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வாஷிங்டனில் சந்தித்தார். அதன்பிறகு வடகொரியாவிடம் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தும் சாத்தியம் குறித்து இருவரும் உரையாடியதாக தென்கொரியப் பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

