சோல்: வடகொரிய வீரர்கள் ரஷ்ய துருப்புகளுடன் சேர்ந்து உக்ரேனில் போரிடக்கூடும் என்றும் சிலர் ஏற்கனவே கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் மேலும் பலர் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தென்கொரிய தற்காப்பு அமைச்சர் அக்டோபர் 8ஆம் தேதி தெரிவித்தார்.
அக்டோபர் 3 ஆம் தேதி அன்று டொனெட்ஸ்க் அருகே ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியின் மீது உக்ரேனிய ஏவுகணை தாக்குதலில் ஆறு வடகொரிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் கடந்த வார இறுதியில் தெரிவித்தன.
“பல்வேறு சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, இந்த அறிக்கை உண்மையாக இருக்கும்,” என்று சோலின் தற்காப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் அக்டோபர் 8 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
“உக்ரேனில் வடகொரிய அதிகாரிகள் மற்றும் வீரர்களிடையே உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்,” என்று அவர் கூறினார்.
ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு ஆதரவாக வடகொரியா மேலும் பல வீரர்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் திரு கிம்.
“வழக்கமான துருப்புகளை அனுப்பி வைப்பதில் உள்ள சிக்கலுக்கு, ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான ராணுவ கூட்டணியைப் போன்ற இருதரப்பு ஒப்பந்தங்கள் காரணமாக இருக்கலாம்,” என்று திரு கிம் கூறினார்.
வடகொரிய ஏவுகணைகள் ரஷ்யப் படைகளால் உக்ரேனில் நிலைநிறுத்தப்படுகின்றன என்று வல்லுநர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். ஆனால் அதை மாஸ்கோவும் பியோங்யாங்கும் மறுத்துள்ளன.


