பியோங்யாங்: வடகொரிய ராணுவத்தின் பலத்தை வேகமாய் முடுக்கிவிடப்போவதாக அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் சூளுரைத்திருக்கிறார்.
வட்டாரத்தில் அமெரிக்காவும் தென்கொரியாவும் அவற்றின் ராணுவங்களை நவீனமயமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். கட்சிக் கூட்டமொன்றில் திரு கிம் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) இந்தத் தகவலை வெளியிட்டது.
வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தின் காரணமாக அதற்கு எதிராகப் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், 1950ஆம் ஆண்டுக்கும் 1953க்கும் இடையில் நடந்த கொரியப் போரின் முடிவில், அமைதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை. மாறாக, தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை மட்டுமே கைகூடியது. அதனால், இரண்டு கொரியாக்களுக்கும் இடையிலான போர் இன்றளவும் நீடிப்பதாகவே பொருள்படும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
வடகொரியாவின் தேசியத் தற்காப்பு ஆற்றல்களை இன்னும் வேகமாக வலுப்படுத்துவது கட்சி மற்றும் நாட்டின் கொள்கை என்பதைத் திரு கிம் தமது உரையின் முடிவில் உறுதிபடக் கூறினார்.
செவ்வாய்க்கிழமையுடன் மூன்று நாள் கட்சிக் கூட்டம் முடிவுக்கு வந்தது. அதில் மூத்த அதிகாரிகள் கொள்கைத் திட்டங்களை மறுஆய்வு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

