இல்லினாய்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது என அண்மையில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வை அமெரிக்காவின் குழந்தை மருத்துவக் கல்விக் கழகம் (ஏஏபி) வெளியிட்டது.
நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையங்களின் இறப்புத் தரவுகளைப் பயன்படுத்தி ஏஏபி இந்த ஆய்வைத் தனது குழந்தை மருத்துவத்திற்கான சஞ்சிகையில் திங்கட்கிழமை வெளியிட்டது.
2021ஆம் ஆண்டு 4,752 குழந்தைகளும், 2020ஆம் ஆண்டு 4,368 குழந்தைகளும், 2019ஆம் ஆண்டு 3,390 குழந்தைகளும் துப்பாக்கிச்சூட்டின்போது ஏற்பட்ட காயங்களால் இறந்துள்ளனர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் குழந்தைகள் உயிரிழப்பில் துப்பாக்கிச்சூடே முதலிடத்தில் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாஷ்வில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று குழந்தைகளும் மூன்று ஆசிரியர்களும் இறந்தனர். அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் பொதுப் பாதுகாப்பு குறித்த சிறப்பு அமர்வு ஒன்றை டென்னிசி மாநிலத்தைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் உருவாக்கினர். அதனைத் தொடர்ந்து இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.

