பெட்டாலிங் ஜெயா: உலகளவில் குறைந்துள்ள எரிபொருள் விநியோகத்தால் மலேசியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அந்நாட்டின் பிரதமருக்கான பொருளியல் ஆலோசகர் நூர்ஹிஷாம் ஹுசெய்ன் கூறியுள்ளார்.
மலேசியாவில் எரிபொருள் விநியோகம் தொடர்ந்து சீராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாண்டிறுதிக்குள் போதுமான எரிபொருளைத் தருவிக்க அரசாங்கம் நம்பிக்கையுடன் இருக்கிறது என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
”இவ்வாண்டு இறுதிவரை போதுமான எரிபொருள் இருக்கும் என்றும் அதைத் தருவிக்க முடியும் என்றும் பெட்ரோனாஸ் நம்பிக்கை கொண்டுள்ளது,” என்று திரு நூர்ஹிஷாம், உலக எரிபொருள் விநியோக நெருக்கடி தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். மலேசியாவின் தேசிய பொருளியல் செயற்குழு அலுவலகத்தின் நெருக்கடி நிர்வாகச் செயற்குழுத் தலைவருமான அவர், உலகளவில் எரிபொருள் நிலவரம் மாறக்கூடிய நிலையில் இருந்துவருவதாகக் கூறினார்.
“அபாயங்கள் என்று பார்க்கும்போது, நாடுகளுக்கிடையிலான அரசியல் பதற்றநிலையாலும் முக்கயிக் கப்பல் பாதைகளில் இடையூறுகள் இருப்பதாலும் விலை அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது,” என்று திரு நூர்ஹிஷாம் குறிப்பிட்டார்.
மலேசியா, கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும். அதேவேளை, எல்என்ஜி எனப்படும் திரவிய இயற்கை எரிவாயுவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் மலேசியா இருக்கிறது.


