பேங்காக்: தாய்லாந்து தலைநகரில் பழைய கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்ததில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
அந்தச் சம்பவத்தில் ஏராளமான கார்கள் சேதமடைந்ததாக அவசரநிலைப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.
தலாட் நொய் துணை மாவட்டத்தில் உள்ள பௌத்த ஆலயத்தின் அருகில் உள்ள கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்ததாக ‘ரமா 100’ வானொலி கூறியது.
தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய ஊழியர்களை மீட்டனர்.
அந்தக் கட்டடத்தின் இரண்டாவது தளத்திலிருந்து கீழே விழுந்த கான்கிரீட் கல் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆடவர் ஒருவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் மாண்டார்.
ஆயினும், அவரைப் பற்றிய அடையாளங்கள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
கட்டட இடிபாடுகளை அகற்றி, உயிரிழந்த ஆடவரின் சடலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

