சோல்: பருவ வயதை எட்டிய தென்கொரியர்களில் இருவரில் ஒருவர் மட்டுமே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.
பாதிக்கும் குறைவானவர்களே குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர்.
ஞாயிறன்று (மார்ச் 17) வெளியிடப்பட்ட புதிய கருத்தாய்வு முடிவுகள்மூலம் இவை தெரியவந்துள்ளன.
இந்த ஆய்வில் பங்கேற்றோரில் 1,059 பேர் திருமணமாகாதவர்கள். அவர்கள் 19 முதல் 49 வயதிற்குட்பட்டவர்கள்.
அவர்களில் 51.7 விழுக்காட்டினர் மட்டுமே திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திருமணம் செய்துகொள்ள விரும்புவோரில் 58.7 விழுக்காட்டினர் 30 - 34 வயதிற்கு உட்பட்டவர்கள்.
எதிர்காலத்திலும் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று 24.5 விழுக்காட்டினரும் இன்னும் முடிவுசெய்யவில்லை என்று 19.1 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.
குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று 46 விழுக்காட்டினர் தெரிவித்தனர். 28.3 விழுக்காட்டினர் மட்டுமே அதற்குத் தயாராக உள்ளனர்.
திருமணம் செய்துகொண்டவர்களில் 46.5 விழுக்காட்டினர் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து யோசித்து வருவதாகக் கூறினர்; 24.7 விழுக்காட்டினர் குழந்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் கூறிவிட்டனர்.
திருமணமாகி ஏற்கெனவே ஒரு குழந்தையேனும் பெற்றுக்கொண்டவர்களில் 76.1 விழுக்காட்டினர், இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டமில்லை எனத் தெரிவித்தனர்.
தென்கொரியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு குழந்தைப் பிறப்பு விகிதம் இதற்கு முன்னில்லாத அளவில் 0.72 எனச் சரிவுகண்டதாக அண்மையில் புள்ளிவிவரம் வெளியானது.