நியூயார்க்: அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துக்குக் கட்டாயப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று ஓப்பன்ஏஐ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் தனக்குத்தானே அதிவேகமாக வளர்ச்சியடையும் திறமை கொண்டுள்ளதால் அது அபாயத்தை உருவாக்கும் என்று அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
அண்மையில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சில செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டன. அவை அனுமதிக்கப்படாத சில இணையத்தளங்களுக்குள் நுழைந்து, அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
இத்தகைய எதிர்பாராத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“நிறுவனங்களின் சுயக்கட்டுப்பாடுகள் மட்டும் போதாது; செயற்கை நுண்ணறிவுத் திறன்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய அளவிலான கட்டாய விதிமுறைகள் தேவை,” என்று ஓப்பன்ஏஐ நிர்வாகி கிறிஸ் லெஹேன் தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்பாகவே இதற்கான சட்டங்களை இயற்றவேண்டும் என்று ஓப்பன்ஏஐ கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தில் ‘ஏஐ’ பாதுகாப்பு விதிகள் முன்மொழியப்பட்ட நான்கு புதிய பாதுகாப்பு மசோதாக்களுக்கும் ஓப்பன்ஏஐ ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மற்றொரு முன்னணி நிறுவனமான ஆந்த்ரோபிக், ஏஐ மென்பொருள்களும் தன்னிச்சையாகப் பிற நிறுவனங்களின் இணையக் கட்டமைப்புகளுக்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு தன்னிச்சையாகச் செயல்படுவது பாதுகாப்பானது அல்ல என ஓப்பன்ஏஐ எச்சரித்துள்ளது. எனவே, இந்தத் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த, அனைத்துலக அளவிலான விதிமுறைகளும் தேவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

