சோகோடோ: நைஜீரியா சோகோடோ எனும் மாநிலத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) ஏற்பட்ட படகு விபத்தில் குழந்தைகள் உட்பட 40 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளும் தொழிலாளர்களும் அப்படகில் பயணித்ததாக முதற்கட்ட விசாரணை கூறுகிறது.
அறுவடை செய்வதற்காக விவசாயப் பகுதிகளுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கோரோன்யோ பகுதிக்குட்பட்ட கொராவ் நகருக்கு அருகில் அந்தப் படகு கவிழ்ந்துள்ளது.
அப்படகில் கிட்டத்தட்ட 70 பேர் பயணம் செய்தனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.
40 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 16 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதத்தில், நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள யோபே மாநிலத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் ஏறக்குறைய 25 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


