மலேசியாவில் போலி அடையாளங்களைக் கொண்டு அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பம் செய்ய 46,000க்கும் மேற்பட்டோர் முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தேசியப் பதிவுத்துறையால் கடந்த 2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘மைஐடென்டிட்டி’ முறை, அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அளிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க பொதுச் சேவை ஆணையத்திற்கு உதவி வருகிறது.
“அடையாள ஆவணங்கள் சார்ந்த துல்லியமற்ற, பிழையான தகவல்களை விண்ணப்பதாரர் அளித்துள்ளாரா என்பதைக் கண்டறிய தேசிய பதிவுத்துறை எப்போதுமே பொதுச் சேவை ஆணையத்துடன் தொடர்பிலிருந்தும் ஒத்துழைத்தும் வருகிறது,” என்று தேசிய பதிவுத்துறை ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு மார்ச் 15ஆம் தேதிவரை போலியான அடையாளங்களைக் கொண்டு அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்ய 46,000க்கும் மேற்பட்டோர் முயன்றதைப் பொதுச் சேவை ஆணையம் கண்டுபிடித்து, அவர்களை முடக்கியுள்ளது என்று மலேசியாவின் பெரித்தா ஹரியான் ஊடகம் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. அவர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர் எனக் கூறப்பட்டது.
கடந்த ஈராண்டுகளில் ஏறக்குறைய 2.2 மில்லியன் பேர் மலேசிய அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பம் செய்ததாக பெர்னாமா செய்தி தெரிவித்தது.